ஒளிநெறி அறிமுகம்
பக்தி என்ற பெயரில் இன்று கோவில்களில் கூட்டம் பெருகி உள்ளது. ஞானம் என்ற பெயரில் ஆசிரமங்களிலும் கூட்டம் மிகைப்பட்டு இருக்கிறது. ஆனால் மனித சமுதாயம் மனித தன்மையை இழந்து தெளிவற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. போதனைகள், புத்தகங்கள், குருமார்கள், உபதேசங்கள், தியான முறைகள் என்று எல்லாவற்றையும் ஏற்று தெளிவடைந்த பின்னும் அவற்றை பயின்று நிறைவான வாழ்க்கையை வாழ முடியாமல் மனித சமுதாயம் துன்பப்படுகிறது. அதற்கான காரணத்தை அவனுக்குள் ஆய்வு செய்யவைத்து மனிதனை மாமனிதனாக்கி இறைவன் இயங்கும் களமாக மாற்றுவதற்கான வாழ்வியல் முறையே ஒளிநெறி ஆகும்.
ஒளி நெறியை உணர்வதற்கான வழிகள்
தொன்மை குருகுல மரபின் முதன்மை குருவாகிய ஆதிமகா யோகி பிரபஞ்ச பேருண்மை இரகசியங்களை ஐந்து இடங்களில் விதைத்து வைத்தார்.
- ஆலய தெய்வ வடிவங்களில் அதன் வழிபாட்டு சடங்குகளில் மறைத்து வைத்தார்.
- மொழியில் அதாவது அறிவு விளக்கங்களை தமிழிலும் அசைவு விளக்கங்களை சமஸ்கிருதத்திலும் விதைத்து வைத்தார்.
- மனிதன் வாழ வேண்டிய வாழ்வியல் முறைகளில் (கலாச்சாரம்) பேருண்மைகளை புகுத்தி வைத்தார்.
- தொன்மை குருகுல வகுப்புகளில் உபதேச குருவின் வடிவம் ஏற்று உண்மைகளை உணர்த்தி வருகின்றார்.
- அகம் நோக்கிய பயணத்தில் பக்குவம் முதிர்வை அடைந்தவர்களுக்கு உள்ளுணர்வின் வடிவம் கொண்டு உபதேசங்களை தொடர்கின்றார்.
ஆதிமகா யோகி வகுத்து தந்த ஐந்து வழிகளில் முயன்று, பெற்ற அரிய உபதேசங்களை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தும் அமைப்பே வள்ளலார் ஆதியினம்.